/

பறவையைத்  தொடர்வோம்...

மஞ்சள் திருடிக் கழுகு "பாரவோவின் சிக்கன்' என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. கழுகுகளில் அளவில் சிறியது.

News image
Updated On :2 மார்ச் 2013, 5:11 am

அபி

மஞ்சள் திருடிக் கழுகு

மஞ்சள் திருடிக் கழுகு "பாரவோவின் சிக்கன்' என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. கழுகுகளில் அளவில் சிறியது. தென்மேற்கு ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா மற்றும் இந்தியாவில் அதிகம் காணப்படும் பறவை. இதன் சிறகின் அடிப்புறம் வித்தியாசமாக இருக்கும். வாலும் வித்தியாசமாக இருக்கும். இந்தப் பறவை பறக்கும்போதுதான் இந்த வித்தியாசம் கண்ணுக்குப் புலப்படும். சிறிய பிராணிகள், பறவைகள், பல்லிகள் ஆகியவை பிடித்த உணவு. மற்ற பறவைகளின் முட்டைகளையும் சமயங்களில் சாப்பிடும். மஞ்சள் நிறத்தில் எந்தப் பொருள் கிடைத்தாலும் தனது உணவுதான் அது என்று எண்ணிக் கொள்ளும். இதனால்தான் இதற்கு மஞ்சள் திருடிக் கழுகு என்ற பெயர் வந்தது.
 தனது அலகால் சிறிய கல் ஒன்றைக் கொத்திப் பிடித்துக் கொண்டு முட்டைகளின் மீது அடித்து அவற்றை உடைப்பது, எந்தப் பறவைகளுக்கும் இல்லாத வழக்கம். அதே போல கூடு கட்டும் போது நூலைக் கொண்டு குச்சிகளைச் சுற்றிவைத்து மெத்தை போல ஆக்கிக் கொள்ளும் பழக்கமும் இதற்கு உண்டு. இந்த நூற்றாண்டில் இந்தப் பறவையினம் கொஞ்சம் கொஞ்சமாக அரிதாகிக்கொண்டு வருகின்றது.
 இதன் உடல் பகுதி வெள்ளையாக இருக்கும். சிறகுகளின் அடிப்பக்கம் கருப்பாக இருக்கும். வெள்ளை நிறத்தில் இருந்தாலும் தூசி படிந்து அழுக்காக பழுப்பு நிறத்தில் காணப்படும். அலகு சற்றே நீண்டு கூர்மையாகவும் முனையில் வளைந்தும் இருக்கும். அலகின் நிறம் மஞ்சள். சிறகுகள் பின்னோக்கி அடர்ந்து கூம்பு போலச் செல்லும். கால்கள் வெளிர்சிவப்பு நிறத்தில் இருக்கும். கால்களில் விரல்கள் கூர்மையாக வளைந்து
 காணப்படும்.
 47 முதல் 65 செ.மீ. நீளம் இருக்கும். சிறகுகளை விரித்தால் 150 செ.மீ. வரை இருக்கும். எடை 1 கிலோ.
 குளிர் காலங்களில் தனது இருப்பிடத்தை விட்டு வேறு இடங்களுக்கு வெகுதூரம் பறந்து செல்லும். ஒரு நாளைக்கு 500 கிலோமீட்டர் வரை பறந்து 5,500 கி.மீ. தூரம் இருக்கும் இடங்களைச் சென்றடையும் வல்லமையுள்ள பறவை.
 தனியாகவோ ஜோடியாகவோ காணப்படும். வானில் பறந்தாலும் தனது முழு கவனத்தையும் தரையில் இருக்கும் உணவைக் கணகாணிப்பதில் செலுத்தும்.
 எப்போதும் அமைதியாக இருக்கும். ஆனால் உணவைப் பார்த்துவிட்டால் நீண்ட நெடிய விசில் சப்தம் ஒன்றை வெளிப்படுத்திக் கொண்டு தரையிறங்கும்.
 மரங்களில் வசிக்கும். பாறைகள் அதிகம் உள்ள இடங்களில் தனது கூடுகளை அமைத்துக் கொள்ளும்.
 இந்தப் பறவையைப் பற்றிய தகவல்களை பைபிளிலும் காண முடியும்.
 தமிழ்நாட்டில் செங்கல்பட்டிலுள்ள திருக்கழுக்குன்றம் மலைக்கு வருகை தந்து குருக்கள் தரும் உணவைச் சாப்பிட்டுச் செல்லும் பறவையினம் இதுதான். இது நூற்றாண்டுகள் கணக்கில் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
 திருக்கழுக்குன்றத்தில் இந்தப் பறவைக்கு அருமையான உணவு கிடைக்கும். அரிசி, கோதுமை, நெய் மற்றும் சர்க்கரை கலந்த உணவை இந்தப் பறவைக்குப் படைக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.